ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி – அருப்புக்கோட்டை சாலையில் உள்ள ஆராய்ச்சி நகர் குடியிருப்பு பகுதியில் வீடு கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் கடலாடி அருகே உள்ள கே.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த பஞ்சவர்ணம் (45), கே.கருங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெயமணி (55) உள்ளிட்ட தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது சாலையில் அதிவேகத்தில் வந்த கார் மோதியதில், பஞ்சவர்ணம், ஜெயமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு, சாலையோரத்தில் மோதி நின்ற காரில் கமுதி அருகே உள்ள அபிராமம் முத்தாதிபுரம் வடக்கூரை சேர்ந்த இளவரசன் என்பவர் இருந்துள்ளார். அவர், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை பிடித்த அப்பகுதி பொதுமக்கள் சாயல்குடி போலீசில் ஒப்படைத்தனர். இந்த விபத்தால் சாயல்குடி – அருப்புக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் இளவரசனுக்கும் லேசான காயம் ஏற்பட்டதால், போலீசார் கடலாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை பெற்ற அவர், மருத்துவமனையை விட்டு தப்பித்துச் சென்றார். இதனையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கார் மோதி இறந்த இரண்டு பெண் கட்டிட தொழிலாளர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று பகல் கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
மருத்துவர்கள் இல்லாததால் இரவாகியும் பிரேத பரிசோதனை செய்யவில்லை. பிணவறையில் குளிர் சாதன பெட்டி வசதியில்லாததால், உடல்களை 60 கி.மீ தூரம் உள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாயல்குடி – தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டது.
