மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறானது ஒரு கட்சி மற்றொரு கட்சியை வீழ்த்த நினைப்பது ஏற்கத்தக்கதல்ல: வீரபாண்டியன் கண்டனம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்து சில கோரிக்கைகளை முன்மொழிந்துள்ளார். தமிழ்மொழிக்கும், தாய்மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்தாய் வாழ்த்தை முதலிடத்திற்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அதனை பிரதமர் ஏற்க வேண்டும். மேகதாது அணை கட்டுவது தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் கருத்துக்களை கேட்காமல் செயல்படுத்துவது ஏற்கமுடியாது.

தமிழக மக்களின் உணர்வுகளை கடந்து அணை கட்டுவதை தடுக்க ஒன்றிய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் நீண்டகால பிரச்னையான மீனவர் பிரச்னையில் நிரந்தர தீர்வு காணவேண்டும். கீழடி தொடர்பான அறிக்கை வெளியிடவும், அகழாய்வு பணிகள் தொடர்ந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளா முன்னாள் முதல்வர் பிரனாயிவிஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ஏற்தக்கதல்ல.

ஆட்சிக்கு வந்த 12 ஆண்டுகளில் ஒன்றிய அரசு பாஜ தலைவர்கள் ஒருவர் வீடுகளில் கூட இதுபோன்ற சோதனை நடத்தியது கிடையாது. நாடு முழுவதும் இடதுசாரிகள் கட்சி தலைவர் வீடுகளில் சோதனை நடத்தினாலும் அங்கிருந்து முறை தவறி பெற்ற ஒருசொத்தை கூட கைப்பற்ற முடியாது. அதற்கு மாறாக புத்தகங்களை மட்டுமே அவர்கள் எடுத்து செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது குறித்தும், 90 சதவீதம் அதிமுகவினர் தவெகவிற்கு வந்துவிடுவார்கள் என்று ஆதவ்அர்ஜூனா கூறி உள்ளாரே என்ற கேள்விக்கு, ‘‘இது தமிழ்நாட்டின் மக்களின் விருப்பங்களுக்கு மாறானது. மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறானது. தமிழகம் பின்பற்றுகின்ற அரசியல் நெறிமுறைக்கு மாறானது. தவெகவிற்கு இடதுசாரிகள், விசிக போன்ற கட்சிகளின் ஆதரவே போதுமானது.

எனவே, சட்ட நெறிமுறைக்கு எதிரான செயலில் ஈடுபடக்கூடாது என்பதை கேட்டுக்கொள்கிறேன். அதிமுக ஒரு ஜனநாயக சக்தி. அதேபோல் திமுக ஒரு ஜனநாயக சக்தி. கொள்கை, கருத்தியலால் மட்டுமே ஒன்றை, ஒன்று எதிர்த்து போராட வேண்டுமே தவிர, ஒருகட்சி மற்றொரு கட்சியை வீழ்த்த நினைப்பது ஏற்கத்தக்கதல்ல. ஒருவர் விருப்பத்தின்பேரில் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இந்த முறை ஏற்கதக்கதல்ல’’ என்று வீரபாண்டி பதிலளித்தார்.

* காங்கிரஸ் அமைச்சர் பேச்சை ஏற்க முடியாது
‘‘பல்கலை வேந்தராக முதலமைச்சர்தான் என்று சட்டபோராத்தை நடத்தியிருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்தான் வேந்தராக இருப்பது சரி. இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. அந்த கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக முதல்வரும் இதில் உறுதியாக இருக்க வேண்டும். இது நம் உரிமை போராடி பெற்றிருக்கிறோம். அதை நாம் இழந்துவிடக்கூடாது’’ என்று வீரபாண்டி தெரிவித்தார்.

Related Stories: