எடப்பாடியிடம் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் சரணடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் மட்டும் இன்னும் எடப்பாடியை சந்திக்கவில்லை. விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்த சி.வி.சண்முகத்தை நீக்கிவிட்டு விழுப்புரத்தை சேர்ந்த பசுபதியை எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளராக அறிவித்திருப்பது சி.வி. சண்முகத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் பரவியது. இவரை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு தங்களது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று சென்னையில் இருந்து திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள அவரது இல்லத்துக்கு வருகை தந்த அவரை முக்கிய நிர்வாகிகள் மட்டும் சந்தித்து பேசியுள்ளனர். தொடந்து மாலை கோயிலுக்கு செல்வதற்காக வெளியே வந்த சி.வி. சண்முகத்திடம், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘மயிலம் தொகுதியில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி சொல்ல வந்து இருக்கேன்.
3 நாட்கள் நான் இங்கே தான் இருப்பேன். தற்போது எதுவும் பேச விரும்பவில்லை’’ என்றார். இதற்கிடையே சி.வி.சண்முகம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ஒத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அதிமுகவிலிருந்து வரும் சமாதான தூதுகள், மாற்று கட்சிகள் அழைப்புகள் குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளார்.
