இது தூய சக்தி இல்லை… பித்தலாட்ட சக்தி தவெக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்துள்ளது: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

ராமநாதபுரம்: தவெக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதுடன், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் நேற்று நடந்த கட்சிப் பிரமுகரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 2 வாரங்களில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச்செயல், ரவுடியிசம் அதிகரித்து வருகிறது.

மாற்றம் வேண்டும் என மக்கள் தவறான முடிவெடுத்து விட்டனர் என்பதை இன்னும் 6 மாதங்களில் தெரிந்து கொள்வார்கள். தவெகவிற்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. குதிரை பேரம் நடத்தி அமைச்சர் பதவி வழங்குவதாக ஆசைவார்த்தை கூறியதால், அதிமுகவில் இருந்து சிலர் பிரிந்து சென்று ஆதரவளித்தனர். ஆனால் தவெக பொய்யான வாக்குறுதி அளித்ததை அறிந்த பலரும் மீண்டும் பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒரு அணியில் இணைவார்கள். தவெகவில் இணைந்த வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட உண்மையான விசுவாசிகள் விரைவில் அதிமுகவில் இணைவார்கள். திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் சிலர் தவெகவிற்கு ஆதரவு அளித்து, அமைச்சரவையில் சேர்ந்திருப்பதும், குடியரசு தலைவர் ஆட்சி வராமல் தடுப்பதற்காக ஆதரவளித்தாக கூறுவது அவர்களுக்கு சரியாக இருக்கலாம். அது ஜனநாயகத்துக்கு விரோதமானது.

தவெக ஒரு தூய சக்தி இல்லை, பித்தலாட்ட சக்திதான் தவெக. அவருக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களை ஏமாற்றி, விஜய் நடுரோட்டில் விட்டுள்ளார். கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருந்த அதிமுகவினரை விஜய் நேரில் சென்று சந்தித்தது சட்டவிரோதமானது. முதல்வர் விஜய் அதிமுகவை உடைக்க பார்த்ததை முன்னரே சொன்னேன். ஜனநாயகத்தை அழித்து குறுக்கு வழியில் திராவிட கட்சிகளை அழிக்கப்பார்க்கிறார்.

அதை திராவிட தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள். மின்சார பிரச்னை உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளை முதல்வர் சரியாக கையாளவில்லை. மக்கள் தவறாக வாக்களித்து விட்டோம் என உணர்ந்து விட்டனர். ஆட்சிப்பொறுப்பேற்றதும், டெல்லியில் பிரதமரை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பிரதமருடன் நடைபெற்ற உரையாடல் குறித்து முதல்வர் விளக்குவது வழக்கமானது. ஆனால் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்தித்தாரா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: