தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து போராட்டம்; பாஜவின் சூழ்ச்சி இங்கு என்றைக்கும் எடுபடாது; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

மதுரையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு இடங்களில் நேற்று காலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் பி.மூர்த்தியை ஆதரித்து வண்டியூர் பகுதியிலும், மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் கோ.தளபதியை ஆதரித்து கோ.புதூர் பேருந்து நிலையம் பகுதியிலும் வாக்குகள் சேகரித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

இந்த மதுரை மண், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண். பாசிச பாஜவால் தமிழ் மொழிக்கு, தமிழ்நாட்டுக்கு இன்றைக்கு ஆபத்து வந்திருக்கிறது. மாநில உரிமைகளுக்கு ஆபத்து வந்திருக்கிறது. நம்முடைய உயிருக்கு நிகரான தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பது மதுரை மக்களுக்கு சொல்லித் தரவேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டை பாதுகாப்பதற்காக தான் வரப்போகிற இந்த சட்டமன்றத் தேர்தல். மதுரை மக்கள் நீங்கள் எப்போதுமே அரசியல் விழிப்புணர்ச்சி உள்ளவர்கள்.

சங்கிகள் என்னதான் கலவரம் பண்ண, திட்டம் போட்டு பிளான் பண்ணி வந்தாலும், நீங்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து முறியடித்து காட்டுகிறீர்கள். அதுக்கு இந்த மதுரையே சாட்சி. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மதுரையில் இருந்த எய்ம்ஸ் செங்கலை எடுத்துபோய் தமிழ்நாடு முழுக்க பிரசாரம் செய்தேன். ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டுக்கு எந்த திட்டத்தையும் கொடுக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் ஆனது உங்களுக்கு தெரியும். இப்போது வரை திறப்பதற்கான வழி கிடையாது.

நம்முடைய தலைவர் தொடர்ந்து சொல்வது மாதிரி இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டி டெல்லி அணியா, தமிழ்நாடு அணியா என்பது தான். இதில், தமிழ்நாடு அணியான நாம் ஜெயிச்சு காட்டணும். இன்றைக்கு (நேற்று) ஒரு முக்கியமான நாள் உங்களுக்கு தெரியும். நமது தலைவர் மு.க.ஸ்டாலின் நாமக்கல்லில் ஒன்றிய அரசுக்கு பெரியளவிலான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிப்பதால் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளேன்.

நம் தலைவருடைய வேண்டுகோள்படி இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க வீடுகள், கடைகள், தெருக்களில் நாம் கருப்பு கொடிகளை பறக்க விட்டுள்ளோம். இந்த மசோதாவை ஒட்டுமொத்த தமிழ்நாடும் சேர்ந்து எதிர்க்க வேண்டும். மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து தமிழ்நாடுடைய பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சி பண்ணுகின்றனர். தமிழ்நாட்டுக்கு ஒழுங்கா பிரிச்சு கொடுத்தாங்கன்னா 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வர வேண்டும். ஆனால் 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் ஒதுக்கீடு செய்ய முயற்சி பண்ணிட்டு இருக்கிறார்கள்.

12 நாடாளுமன்ற உறுப்பினர்களை குறைக்கப் பார்க்கின்றனர். ஒன்றிய அரசு குடும்ப கட்டுப்பாடு செய்து மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என கூறினார்கள். வடமாநிலங்கள் இதை சரியா செய்யவில்லை. நம்ம தமிழ்நாட்டு மக்கள் மட்டும் அதை சரியா செய்து, இன்னைக்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். ஒன்றிய அரசு சொன்ன விஷயத்தை நாம சரியா செய்ததால், இன்றைக்கு நம்முடைய உரிமைகளை ஒன்றிய அரசு பறிக்கப் பார்க்கிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பமும் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டுல தேர்தல் நடந்துகிட்டு இருக்கிறதுனால, நம்மை திசை திருப்பி மசோதாவை கொண்டு வர ஒன்றிய பாஜ அரசு முயற்சிக்கிறது. பாஜவின் சூழ்ச்சி தமிழ்நாட்டில் என்றைக்குமே எடுபடாது. அதை சட்டமன்றத் தேர்தலிலும் நிரூபித்து காட்டுவோம். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிப்பவரை இனிமேல் நம்மால் வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது. தமிழ்நாடு முழுக்க சட்ட நகலை எரிக்கிறோம்.

பாசிஸ்ட்களுக்கும், அடிமைகளுக்கும் சரியான பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய தேதி ஏப். 23. நம் தலைவர் மீண்டும் முதலமைச்சராக வரப்போவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் வண்டியூர் பேருந்து நிலையம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்எல்ஏ ஆகியோர் தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* ‘ஓபிஎஸ்சை கெத்தா சட்டமன்றம் அனுப்பணும்’
போடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் நேற்று மாலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘சென்ற முறை 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நாம தான் அண்ணனிடம் தோற்றோம். இந்த முறை அதற்கும் சேர்த்து நம்ம அண்ணனை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு கெத்தாக அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த மாவட்டத்தில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். எப்படிபட்ட வெற்றினா, அதுவும் அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தை நான் அறிமுகம் செய்து வைக்க தேவையில்லை. அவரை இந்தியா முழுவதும் தெரியும். எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பவர். அதுவே அவருக்கு பிரச்னையாக ஆகி இருக்கிறது. மாற்றி மாற்றி கால் பிடித்து மாற்றி மாற்றி துரோகம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே நம் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்று திமுகவிற்கு வந்திருக்கிறார்.

இன்றைக்கு அதிமுகவை அமித்ஷாவிடம் மொத்தமாக விற்று விட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நாம் சரியான பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். செய்வோமா? மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது. நான் உங்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்றார்.

 

Related Stories: