தின்ஹாட்டா: மேற்கு வங்காளத்தின் கலாசாரத்தை அழித்து டெல்லியில் இருந்து மாநிலத்தை கட்டுப்படுத்த பாஜக முயற்சிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்க சட்டப் பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தின்ஹாட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘பாஜகவினரின் திட்டம் என்னவென்றால், ‘என்ஐஏ’ அதிகாரிகளை உள்ளே கொண்டு வந்து, அவர்களே வெடிகுண்டை வெடிக்கச் செய்துவிட்டு, அதன் பழியை மற்றவர்கள் மீது போடுவதுதான்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து இங்குள்ள இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களை கைது செய்வார்கள். எனவே நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், எந்த பிரச்னையிலும் சிக்க வேண்டாம் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். கலவரத்தை உருவாக்கி அவர்கள் ஓட்டுகளை திருடுவார்கள். தேவைப்பட்டால் நள்ளிரவிலும் அவர்களை நீங்கள் கண்காணிக்க வேண்டும். மேற்குவங்காளத்தை டெல்லி மற்றும் குஜராத்தில் இருந்து கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. மேற்குவங்கம் ஒருபோதும் பணியாது. உங்களது வாக்குகள் மேற்குவங்காளத்தின் அடையாளத்தையும், கண்ணியத்தையும் காக்கட்டும்’ என்று பேசினார்.
இதற்கிடையே, மேற்கு வங்காளத்தின் மேற்கு வர்த்தமான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘கடந்த 15 ஆண்டுகளாக மேற்குவங்கத்தின் அடையாளங்கள் தொலைந்துவிட்டன. மேற்குவங்கத்தை தீவிரவாதம், மாபியா ஆட்சி, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஊழல் கூடாரமாக மாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் மாற்றிவிட்டது. இனிமேல் அந்த கட்சி தேவைப்படாது. மாபியா கலாசாரத்தை பாஜக முடிவுக்கு கொண்டு வரும்’ என்றார். மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வரும் 23ம் மற்றும் 29ம் தேதிகளில் மக்கள் வாக்களிக்க உள்ளனர். 4வது முறையாக ஆட்சியை பிடிக்க துடிக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பலத்தை நிரூபிக்க துடிக்கும் பாஜகவுக்கும் இடையே அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
