மக்கள் பயன்பெறும் வகையில் போஜராஜ நகர் சுரங்கப்பாதையை நான்தான் அமைத்துக் கொடுத்தேன்: அ.தி.மு.க வேட்பாளர் டி.ஜெயக்குமார் பிரசாரம்

சென்னை: ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் டி.ஜெயக்குமார் வீதிவீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு வருகிறார். வழிநெடுகிலும் ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக திரண்டு ஆரத்தி எடுத்தும் பூக்களை அள்ளித் தூவியும் கையசைத்தும் டி.ஜெயக்குமாருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். பிரசாரத்தில் குழந்தைகளை தூக்கி கொஞ்சுவது, சிறுவர்களுடன் குத்துச்சண்டை விளையாடுவது, நான் உங்கள் வீட்டு பிள்ளை என்று எம்.ஜி.ஆர் பாடலை பாடுவது, எல்லோரிடமும் கைக்குலுக்கி நலம் விசாரிப்பது என்று வாக்காளர்களை கவர்கிறார் போஜராஜ நகர் பகுதியில் டி.ஜெயக்குமார் மக்கள் மத்தியில் பேசும்போது. ‘’நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது போஜராஜ நகரில் நிறைய திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன். இங்கு சாலை போட்டு கொடுத்தேன். மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்க கூடிய போஜராஜ நகர் சுரங்கப்பாதையை நான்தான் அமைத்துக் கொடுத்தேன். போஜராஜ நகரில் ரெயில்வே கிராசிங்கை கடக்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட நேரம் காத்து இருக்க வேண்டி இருந்தது.

அவர்கள் கஷ்டத்தை போக்க அங்கு சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்தேன். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுடன் பேசினேன். மாநகராட்சி அதிகாரிகளுடனும் விவாதித்தேன். அதன் பயனாக போஜராஜ நகர் சுரங்கப்பாதையை உருவாக்கி கொடுத்தேன். இந்த சுரங்கப்பாதை மூலம் மக்கள் பல மணிநேரம் ரெயில்வே கிராசிங்கை கடக்க காத்திருப்பது தவிர்க்கப்பட்டது. தற்போது போஜராஜ நகர் சுரங்கப்பாதையில் மக்களும் வாகனங்களும் தங்கு தடையின்றி செல்கிறார்கள். இந்த சுரங்கப்பாதையை மக்களுக்காக நான் அமைத்து கொடுத்தேன் என்பதில் எனக்கு பெருமையும் மன நிறைவும் இருக்கிறது. ஒரு எம்.எல்.ஏ செய்யும் பணி இதுதானே?

நான் எம்.எல்.ஏ ஆன பிறகுதான் ராயபுரத்தில் குடிநீர் வசதி, கழிவு நீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்குகள் என்று அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தேன். ராயபுரத்தில் நிறைய பாலங்கள், சுரங்கப்பாதைகளை உருவாக்கி கொடுத்தேன். நான் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்னால் ராயபுரத்தில் மழையில் வெள்ளம் தேங்கி மக்கள் மிகுந்த கஷ்டப்பட்டனர். ஆனால் மழை பெருவெள்ளத்தில் சென்னையில் எல்லா இடங்களிலும் வெள்ளம் தேங்கிய நிலையிலும் ராயபுரத்தில் வெள்ளம் நிற்காத நிலையை உருவாக்கினேன்’’என்றார்.

மேலும் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ‘‘கடந்த ஐந்து வருடத்தில் பின்னோக்கி சென்ற ராயபுரத்தை மீட்டு எடுப்பதே குறிக்கோள். அடைப்படை வசதிகள் நிரம்பிய, சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லாத, ரவுடி மாமூல் இல்லாத பாலியல் வன்கொடுமைகள் இல்லாத பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் ராயபுரத்தை உருவாக்குவேன். டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏவாக இருந்தபோது பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இருந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை, கஞ்சா இல்லை. அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடியாக கிடைத்தது, கொரோனா காலத்தில் வீடு வீடுவீடாக நிறைய உதவிகள் செய்தார் என்று மக்கள் உணர்ந்து என்னை வெற்றிபெற செய்ய முடிவு எடுத்து விட்டார்கள்’’என்றார்.

Related Stories: