ஸ்ரீரங்கத்தில் அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா, தனது வேட்பாளர் விஜய்யை ஆதரித்து பேசுகையில், ‘‘நாங்களும் ஒரு தேர்தல் அறிக்கையை கொடுக்க உள்ளோம். சென்னையில் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க கூடாது. நம் துரோகிகள் அதை தான் செய்து வருகின்றனர். அதனால் தான் மக்கள் பிரச்னைகளை தொகுதிகள் தோறும் கேட்டபடி வருகின்றேன். அதை வைத்து கொண்டு ஒரு தேர்தல் அறிக்கையை தயார் செய்வோம் எனக்கூறியுள்ளேன்’’ என்றார்.
திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் நந்தகுமாரை ஆதரித்து சசிகலா பேசுகையில், ‘‘இப்ப புதிதாக புறப்பட்டுள்ள பிரச்னை என்னவெனில், ஒன்றிய அரசு தொகுதி மறுவரையறை என ஒரு சட்டத்தை கொண்டு வருகிறார்கள். இது நம் மாநிலத்துக்கு எதிராகவே முடியும். 543 தொகுதிகளை 850 தொகுதிகளாக உயர்த்தவுள்ளதாக கூறுகிறார்கள்.
அவ்வாறு செய்தால், நம் மாநில பிரதிநிதித்துவம் குறையும். திட்டங்களை முறையாக செயல்படுத்தும் மாநிலங்கள் பாதிக்காத வகையில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதை தமிழ்நாட்டிலுள்ள கட்சிகள் எதிர்ப்பது தவறல்ல. மற்ற அரசியல் கட்சிகள் மாதிரியே, புதிதாக அரசியல் கட்சி துவங்கியுள்ளவர்களும் வாக்குறுதியை அள்ளி வீசுகின்றனர். அவர்களுக்கு அரசு நிர்வாகம் குறித்தெல்லாம் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
