திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் பெரணமல்லூர் பேரூராட்சி பகுதியில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.அம்பேத்குமாருக்கு நடிகை ஆர்த்தி கணேஷ் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்பட்டு வரும் உரிமைத்தொகை அது இலவச தொகை கிடையாது.
மக்களின் உரிமை தொகையாக முதல்வர் வழங்கி வருகிறார். ஆனால் இங்கு எதிர்க்கட்சியாக பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு உள்ள அதிமுக 10 வருட ஆட்சியில் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. தற்போது வந்தால் மட்டும் அவர்களால் என்ன செய்ய முடியும், ஒன்றும் செய்ய முடியாது. இதையெல்லாம் தவிர்த்து ஒரு நடிகர் களத்தில் இறங்கி உள்ளார். அவர் தற்போது தான் சைக்கிள் ஓட்டவே கற்றுக் கொண்டுள்ளார்.
அரசியலில் ராக்கெட், பிளைட் ஓட்ட காலம் பிடிக்கும். ஆனால் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு தமது முகத்தை காட்டி விட்டால் ஓட்டு கிடைக்கும் என முகத்தை மட்டும் காட்டி வருகிறார். அதாவது சினிமாவில் காலை 6மணிக்கு சூட்டிங் எடுத்து மாலை 6 மணிக்கு முடிந்து விடும். அதுபோல இவர் ஷூட்டிங் என நினைத்துக் கொண்டு மாலை 6 மணிக்கு மேல் வருவதில்லை. ஒரு படத்தில் கவுண்டமணிக்கு 6 மணிக்கு மேல் கண் தெரியாது. அது மாலைக்கண் நோயாக இருக்கும். அதுபோல இவருக்கு ஏதோ ஒன்று என நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
