தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து எடப்பாடி பழனிசாமி, பாஜக உடனான உறவை துண்டிப்பாரா என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய ப.சிதம்பரம், தன்மானம் என்ற ஒன்று இருந்தால் பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
தொகுதி மறுவரையறை மூலம் தென்மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் குரல்வளை நெறிக்கப்படும், நசுக்கப்படும் என்று நான் அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி தொடர்ந்து பேசி கொண்டே வருகிறேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து பேசாமல், அதனால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று மட்டுமே பேசி வருகிறார்.
ஒன்றிய அரசு மேற்கொள்ள துடிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவின் பாதகங்களை உண்மையாக புரிந்து கொண்டு, பாஜக உடனான உறவை எடப்பாடி பழனிசாமி துண்டிப்பாரா என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார். தொடர்ந்து பேசிய ப.சிதம்பரம், உண்மையிலேயே தன்மானம் மற்றும் சுயமரியாதையுடன் தனிக்கட்சியை நடத்துகின்ற பொதுச்செயலாளர் என்றால் உடனேயே பாஜக-வுடன், அதிமுக கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டும். ஆனால், அவர் இதை செய்வாரா என்று ப.சிதம்பரம் பேசி இருக்கிறார். அமித்ஷா கூறுவதை அப்படியே இங்கு திருப்பி கூறும் எடப்பாடி பழனிசாமி, தான் நடத்தும் கட்சியின் பெயரை அமித்ஷா திமுக-வாக மாற்றிவிடலாம் என்றும் கடுமையாக சாடி இருக்கிறார். தமிழகத்தில் பாஜக, அதிமுக என்ற முகமூடியை அணிந்து கொண்டு தேர்தலில் போட்டியிடுகிறது. பாஜக-வின் அடிமை கட்சியாக இருக்கும் அதிமுக நம்மையாளும் அரசியல் தவறு நடந்து விட கூடாது என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டு உள்ளார்.
