பாஜ மையக்குழு நிர்வாகிகளுடன் சென்னையில் பிரதமர் மோடி ஆலோசனை: உள்கட்சி மோதல் குறித்து கடும் எச்சரிக்கை எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என குறிப்பிடாமல் பேசியதால் பரபரப்பு

சென்னை: தமிழகத்தில் பாஜ போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ மையக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் உட்கட்சி மோதல் குறித்து பிரதமர் மோடி எச்சரித்தார். அப்போது முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை அவர் வலியுறுத்தாமல், என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.

அதே நேரத்தில் பாஜ போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு என்பது தொடர்ந்து காலதாமதம் நிலவி வந்தது. கடும் இழுபறிக்கு மத்தியில் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் பிற்பகலில் வெளியிடப்பட்டது. அதில் நயினார் நாகேந்திரன்- சாத்தூர், மயிலாப்பூர்-தமிழிசை சவுந்தரராஜன், அவினாசி- எல்.முருகன், கோவை வடக்கு- வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்களும் அடியோடு புறக்கணிக்கப்பட்டனர்.

இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் பிற்பகலில் சென்னை வந்தார். பின்னர் அவர் புதுச்சேரி புறப்பட்டு சென்றார். அங்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு, கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று இரவு தங்கினார்.

இந்நிலையில் அந்த ஓட்டலில் நேற்று காலை பிரதமர் மோடி தலைமையில் பாஜ மையக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 18 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. பாஜ போட்டியிடும் 27 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று கேட்டறிந்தார்.

கடந்த முறையை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கான தேர்தல் வியூகம் என்ன என்பது தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள், முக்கிய தலைவர்கள் பயணம் உள்ளிட்ட பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கட்சிக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை மறந்து வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த கூட்டத்தில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து எச்சரித்த மோடி, எடப்பாடி பழனிசாமி முதல்வராக பாடு பட வேண்டும் என்று குறிப்பிடாமல், என்டிஏ கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று பேசியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு பரபரப்பாகியுள்ளது. ஏற்கனவே, பிரதமர் முதல் ஒன்றிய அமைச்சர்கள் வரை முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்று ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை. என்டிஏ கூட்டணி அமையும் என்று தான் கூறி வருகின்றனர் என்பது குறிபிப்பிடத்தக்கது.

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் சென்னையில் உள்ள 16 தொகுதிகளின் வேட்பாளர்கள் பிரதமரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். சென்னை வந்துள்ள பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், அந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. மேலும் பிரதமர் மோடி சென்னை மயிலாப்பூரில் பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய இருந்தார். ரோடு ஷோவில் ஈடுபட போவதாக முதலில் தகவல் வெளியானது. இதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பிரதமரின் சென்னை பிரசாரம், ரோடு ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, பிற்பகல் 1.10 மணியளவில் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து, காரில் புறப்பட்டு, பிற்பகல் 1.20 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தார். பின்னர், அங்கிருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டு சென்றார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. குறிப்பாக மீனம்பாக்கம், கிண்டி மற்றும் பிரதமர் பயணிக்கும் பாதைகள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டு, டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் சந்திப்பு; பிரதமர் மோடி தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
தேர்தல் பிரசாரத்திற்கு இடையே சென்னையில் ரமேஷ் விநாயகம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் ரமேஷ், இந்திய இசையை பிரபலப்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தான் உருவாக்கி வரும் கமகா பாக்ஸ் இசைக்குறியீடு முறையின் சிறப்பம்சங்களை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். இந்திய இசையை சர்வதேச நிலைக்குக் கொண்டு செல்ல இது ஒரு புதுமையான முயற்சியாகும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: