சென்னை: நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த 30ம் தேதி விஜய் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 2ம் தேதி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். விஜய் தாக்கல் செய்த மனுவில் சென்னை பெரவள்ளூர் காவல் நிலையத்திலும் மதுரை கூடகோவில் காவல் நிலையத்திலும் வழக்கு இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் வயது குறித்து இரண்டு தொகுதிகளிலும் மாறுபட்ட தகவல்களை பதிவிட்டும் இருந்தார்.
இந்நிலையில், தவெக சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவை சந்தித்து விஜய் வேட்புமனுவில் திருத்தம் செய்வதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தனர். ற்கனவே தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னுடைய வயது 52 எனக் குறிப்பிட்டிருந்தார். திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த மனுவில் 51 எனக் குறிப்பிட்டிருந்தது எனவே, பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் 51 வயது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விஜய் மீது கொளத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பதியப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் குறித்த தகவல்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இரு பிரமாண பத்திரத்தில் தன்னிடம் ஐந்து சொகுசு கார்களும் ஒரு டிவிஎஸ் எக்ஸ் எல் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார். ஆனால், தற்போது திருத்தம் செய்த மனுவில் தன்னிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள கேரவன் உள்ளதாக கூறியுள்ளார். அந்த வாகனத்தை ஏன் மறைத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், விஜய்யின் அசையும் சொத்து மதிப்பு ரூ.410 கோடியாக உயர்ந்துள்ளது.
அதேபோல், விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கிலும் முன்னர் தாக்கல் செய்த மனுவில், 2015-16ம் ஆண்டு ரூ.1.5 கோடி செலுத்த வேண்டிய வழக்கும், 2022-23ம் ஆண்டில் ரூ.14 லட்சம் செலுத்த வேண்டிய வழக்கும் வருமான வரித்துறை ஆணையரிடம் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது பெரம்பூரில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட மனுவில் ரூ.2.55 கோடி செலுத்த வேண்டிய வழக்கு வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தவெக வழக்கறிஞர்களிடம் செய்தியாளர்கள் விஜய்யின் வேட்பு மனு சர்ச்சை குறித்தும் தவறு திருத்தப்பட்டதா என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பினர். ஆனால் எதற்கும் அவர்கள் பதில் அளிக்க முடியாது என்று கூறிவிட்டுச் சென்றனர். மேலும் மேலிடம் எதுவும் பேசக்கூடாது என்று கூறி இருக்கிறார்கள் எனக் கூறிக்கொண்டே காரில் ஏறிச் சென்றனர்.
* மீண்டும் மீண்டுமா?
ஏற்கனவே விஜய் பெரம்பூரில் தாக்கல் செய்த மனுவிற்கும் திருச்சி கிழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கும் இடையே வயது மற்றும் வழக்கு ஆகிய தகவல்களில் முரண்பாடுகள் இருந்ததால்தான் திருத்தம் செய்யப்பட்ட மனுவை நேற்று பெரம்பூரில் தாக்கல் செய்தனர். தற்போது, திருச்சி கிழக்கில் கொடுத்த மனுவிலும் ரூ.6 கோடி மதிப்புள்ள கேரவன் உள்ளது மற்றும் ரூ.2.55 கோடி செலுத்த வேண்டிய வழக்கு வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது ஆகிய தகவல்கள் இல்லை. ஆதலால் மீண்டும் திருச்சி கிழக்கிலும் திருத்தம் செய்யப்பட்ட வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
