தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்னும் 1 நாள் மட்டுமே வாய்ப்பு: 3 நாளில் திமுக, அதிமுக உள்ளிட்ட 3,386 பேர் மனு

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒருநாள் மட்டுமே வாய்ப்பு உள்ளது. 3ம் நாளான நேற்று அரசியல் கட்சிகள் போட்டி போட்டு மனு தாக்கல் செய்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 3,386 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. கடந்த 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

முதல் நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி சீமான், தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள், திமுக, அதிமுக வேட்பாளர்கள், சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். முதல் நாளில் தமிழகம் முழுவதும் 573 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஏப்ரல் 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். கடந்த 31ம் தேதி (மகாவீர் ஜெயந்தி), 1ம் தேதி (வங்கி விடுமுறை) என 2 நாள் தொடர் விடுமுறை என்பதால், மனு தாக்கல் செய்யப்படவில்லை. 2ம் தேதி மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

சுமார் 800 பேர் மனு தாக்கல் செய்தனர். குறிப்பாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ராயபுரம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தனர். தவெக தலைவர் விஜய் ஏற்கனவே கடந்த 30ம் தேதி பெரம்பூர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் 2வது தொகுதிக்கான வேட்புமனுதாக்கல் செய்தார். அதேபோன்று திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் 2ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நேற்று முன்தினம் (3ம் தேதி) பெரிய வெள்ளி என்பதால் அரசு விடுமுறை. நேற்று 4ம் தேதி (சனி) அரசியல் கட்சிகள் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் சுமார் 2000 பேருக்கு மேற்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அதன்படி கடந்த 3 நாட்களில் சுமார் 3,386 பேர் மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, இன்று (5ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரசு விடுமுறை ஆகும். மனு தாக்கல் செய்ய முடியாது. அடுத்து இறுதி நாளான 6ம் தேதி (திங்கள்) வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

அதன்படி, தமிழகத்தில் இன்னும் ஒருநாள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். இறுதிநாளான திங்கள் (6ம் தேதி) விடுபட்ட திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ், பாஜ வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் மாலைதான் வெளியானது. அவர்களும் இறுதிநாளான திங்கட்கிழமை தான் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். 7ம் தேதி (நாளை மறுதினம்) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும்.

9ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுவை வாபஸ் வாங்கலாம். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு 9ம் தேதி மாலை 3 மணிக்கு மேல் சின்னம் ஒதுக்கப்படும். அதன் அடிப்படையில், வேட்பாளரின் போட்டோ, சின்னம், பெயர் விவரங்களுடன் பேலட்ஷீட் தயாரிக்கப்பட்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள் நடைபெறும். 21ம் தேதி மாலை 6 மணி வரை பிரசாரம் செய்யலாம். 23ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும். மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

Related Stories: