திமுக ஆட்சி அமைவதை ஆயிரம் அமித்ஷா, எடப்பாடி கூட்டணி வந்தாலும் தடுக்கமுடியாது செல்வப்பெருந்தகை சவால்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் மிரட்டப்பட்டு கூட்டணிக்கு எடப்பாடி பணிய வைக்கப்பட்டார். சி.பி.ஐ. விசாரிக்கிற ஊழல் வழக்குகளில் சிக்கி, அமித்ஷாவின் பாதுகாப்பில் வலம் வந்து கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி, அரசியல் பேராண்மையோடு பாஜவை எதிர்த்து வருகிற முதல்வர் மு.க. ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையாம், பாலியல் குற்ற வழக்குகள் அதிகரித்து விட்டதாம் என அபாண்டமாக குறை கூறுகிறார். கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தையே உலுக்கிய ஒரு முக்கிய பாலியல் வழக்காகும். இந்த பின்னணியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று எடப்பாடி கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும்.

எடப்பாடி பழனிசாமி பேச்சை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பல சாதனைகளை படைத்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைவதை ஆயிரம் அமித்ஷா, எடப்பாடிகள் எத்தகைய கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தடுக்க முடியாது. இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

Related Stories: