சென்னை: சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தேன். சட்டப் பேரவைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினேன். இது எனக்கு நீண்ட நாள் கனவு. 2006ம் ஆண்டில் இருந்தே தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என பிடிப்பாக இருந்தேன். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று பேசியிருந்த நிலையில் கூட்டணியில் அது சலசலப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அதனை தற்போது மறுதலித்தேன்.
நான் வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட போகிறேன் என்று சொன்னதும் பல பேர் பல யூகத்தில் பேசுகிறார்கள். ஏற்கனவே வெற்றிபெற்ற 3 வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்று விமர்சித்தனர். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்பது தான், அவர்களை மாற்றுவதற்கு என்னுடைய சமூகநீதி பார்வைதான் காரணம். நான் பேச நினைப்பதை அப்படியே சட்ட சபையில் விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுகின்றனர்.
அவர்கள் குறித்து சட்டசபை அலங்காரமாக இருக்கிறது என்றால் அதற்கு சிறுத்தைகள் தான் காரணம் என்று பலரும் கூறினார்கள். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் அனைவரும் கேட்கிறார்கள், நான் அனைவருக்கும் சமரசம் செய்ய வேண்டும். என்னை யாராலும் இன்புளியன்ஸ் செய்ய முடியாது, அது எந்த காலத்திலும் முடியாது. எங்கள் கூட்டணியின் நலன் பாதிப்படையும் என்ற சூழலில் இதனை சிந்திக்க வேண்டும்.
சமூக வலைதளத்தில் என்னுடைய முடிவை பற்றி பேசுவது என்னுடைய எண்ணத்தை கொச்சைப்படுத்துவது போல இருக்கிறது. அதுமட்டுமின்றி இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே என் உத்தியை மாற்றுகிறேன், இதனால் நான் பின்வாங்குகிறேன் என நினைக்க வேண்டாம், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் போட்டியிடவில்லை. எனக்கு பதிலாக மறைந்த தலைவர் இளைய பெருமாள் மகன் ஜோதிமணி காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுவார். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
