பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களுக்கு ரூ.54 லட்சம் அளவில் மஞ்சள் பை விருதுகள்

நாகப்பட்டினம், டிச. 17: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில கூறியிருப்பதாவது:
மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சட்டமன்ற கூட்டத்தில் மஞ்சப்பை விருது அறிவிக்கப்பட்டது. ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக், கை பைகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

முதல் பரிசு ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ.3 லட்சம் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலக இணையதளத்தில் //nagapattinam.nic.in மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர், அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் அனைத்தும் ஜனவரி மாதம் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: