சென்னை: எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகும் ‘வாரணாசி’ என்ற பான் வேர்ல்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. 6 ஆண்டுக்கு பிறகு அவர் நடிக்கும் நேரடி இந்திய படம் என்பதால் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த அவர் தற்போது ஹாலிவுட்டிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தி பட உலகை விட்டு ஹாலிவுட் சினிமாவுக்கு சென்ற காரணம் குறித்து பிரியங்கா சோப்ரா பேசியுள்ளார். அவர் கூறும்போது, ‘‘இந்தி சினிமாவை விட்டு நான் ஒருபோதும் விலக நினைத்தது இல்லை.
ஆனால் சில காரணங்களால் என் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை நான் உணர்ந்தேன். அதே நேரத்தில் அப்போதிருந்த என் நிலையில் இருந்து நான் மேலும் வளர நினைத்தேன். அதனால் ஹாலிவுட் சினிமாவுக்கு சென்றேன். என்னதான் இருந்தாலும் இந்திய சினிமா மீதான என் நேசமும், பாசமும் என்றும் போகாது. பாலிவுட் சினிமா, ஹாலிவுட் சினிமா, எது பெரியது? என்ற எல்லைக்கு நான் செல்ல விரும்பவில்லை. இதுதான் உன் எல்லை என்று கூறி, என்னை யாரும், எந்த ஒரு வரையறைக்குள்ளும் அடக்கி வைக்க முடியாது. எனக்கு எல்லை என்பதே கிடையாது’’ என்றார்.
