சென்னை: வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. அதன்பிறகு முன்னணி ஹீரோயினாக உயர்ந்த அவர் தற்போது இந்தியில் தனது நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சில காலமாகவே பாலிவுட் நடிகையும், மக்களவை எம்பியுமான கங்கனா ரனாவத், டாப்ஸி இடையே மோதல் போக்கு நீடித்து வருவதாக சொல்லப்பட்டு வந்தது. பட விழாக்களில் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருப்பது, முகத்தை திருப்பிக்கொண்டு போவது போன்ற அவர்களின் செயல்பாடுகள் இருவருக்கும் பிரச்னை இருப்பதை உறுதி செய்கிறது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன் கங்கனா ரனாவத்தின் சகோதரி, ‘சீப் காஃபி’ என்று டாப்ஸியை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் கங்கனா ரனாவத்துடனான பிரச்னை குறித்து டாப்ஸி பேசும்போது, ‘‘எங்களுக்குள் சண்டை என்று யார் சொன்னது? அப்படி சொல்பவர்கள் நேரில் பார்த்தார்களா? கங்கனாவின் சகோதரி தான் என்னை சீண்டி பார்த்தார். ஆனால் என் தரப்பில் இருந்து நான் எந்த பிரச்னையும் செய்யவில்லை. இதுவரை நான் ஒரு வார்த்தை கூட கங்கனாவை பற்றி தவறாக பேசியதில்லை. இதை சண்டை என்று அவரவர் விருப்பத்திற்கு பேசுபவர்களுக்கு, அதனால் சந்தோஷம் கிடைக்கும் என்றால் அதை செய்யட்டும்’’ என்றார்.
