மலையாள நடிகையும், பாடகியுமான அனுபமா பரமேஸ்வரன், தமிழில் ‘கொடி’, ‘தள்ளிப் போகாதே’, ‘சைரன்’, ‘டிராகன்’, ‘பைசன்: காளமாடன்’, ‘லாக்டவுன்’ ஆகிய படங்களில் நடித்தார். கன்னடத்திலும் நடித்துள்ள அவர், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சைக்காலஜிக்கல் திரில்லர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை ஷான் இயக்குகிறார். பாலிவுட்டில் ‘ரஸ்டம்’, ‘டாய்லெட்: ஏக் பிரேம் கதா’, ‘பேட் மேன்’ ஆகிய படங்களை தயாரித்த பிரேர்னா அரோரா, தற்போது ஷிவின் நரங், கிரண் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கும் இந்தி படத்தின் மூலம் அனுபமா பரமேஸ்வரன் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பிறகு இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது.
வரும் மே மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. பிரேர்னா அரோரா கூறுகையில், ‘அனுபமா பரமேஸ்வரனுடன் இணைவதை சிறப்பானதாக உணர்கிறேன். பல்வேறு மொழிகளில் நடித்து வரும் அவரது திறமையை பலமுறை பாராட்டியுள்ளேன். இப்படம் ஒரு நடிகையாக அவருக்கு சிறப்பாக இருக்கும்’ என்றார். அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட பதிவில், ‘மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது. எனது பிறந்தநாளுக்கு கிடைத்த அன்புக்கும், வாழ்த்துக்கும், ஆசிகளுக்கும் நன்றி. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க நேரம் கிடைக்கவில்லை. உங்களது வாழ்த்துகளால் நான் மிகவும் மகிழ்ந்துள்ளேன். என்னை சிறப்பாக உணர வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
