ஓமலூர், மே 30: ஓமலூர் அருகே ஆட்டு கொட்டகையில் புகுந்த நாய்கள், ஆடுகளை கடித்து குதறியதில் 13 ஆடுகள் உயிரிழந்தன.ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமம் சம்புகுட்டைகாடு பகுதியை சேர்ந்தவர் பொன்னப்ப கவுண்டர். இவர் விவசாயம் செய்து கொண்டு, 10 மாடுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம்போல் ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு தூங்க சென்றார்.
நேற்று அதிகாலையில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது, கொட்டகையில் 2 நாய்கள் ஆடுகளை கடித்து குதறிக் கொண்டிருந்தது. இதையடுத்து, அவர் நாய்களை அங்கிருந்து விரட்டியடித்தார். நாய்கள் கடித்து குதறியதில் 13 ஆடுகள் உயிரிழந்தன. 3 ஆடுகள் படுகாயம் அடைந்தன. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் உயிருக்கு போராடிய ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார்.
மேலும் சர்க்கரைசெட்டியப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம் சுற்றுவட்டார பகுதியில் இதேபோல், 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெறிநாய்கள் ஆடுகளை கடித்ததில் 3 ஆடுகள் இறந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். நாய்கள் கடித்ததில் கடந்த 2 நாட்களில் மட்டும் 17 ஆடுகள் இறந்துள்ளன. இதனால் வெறி நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நாய்கள் கடித்து 13 ஆடுகள் சாவு appeared first on Dinakaran.