சேலம், மே.29: சேலத்தில் மோசடி வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். சேலம் சங்ககிரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்தவர் ராகேஷ்குமார்(69). உ.பி.யை சேர்ந்த இவர், சேலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு படிக்க செல்வோருக்கு விசா வாங்கி தரும் ஏஜென்சியில் வேலை செய்து வந்தார். ஆனால் வெளிநாடு செல்வோரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு விசா வாங்கி கொடுக்கவில்லை. இது தொடர்பான புகாரின் பேரில், ஏஜென்சியில் பணியாற்றிய ராகேஷ்குமார் மற்றும் மேலாளர் மீது, சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டது.
கடந்த 2015ம்ஆண்டு வழக்கு பதிவு செய்த போலீசார், ராகேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலாளர் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த ராகேஷ்குமார், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் பெங்களூருவில் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை கைது செய்ய சேலம் 2வது நீதித்துறை நடுவர் மன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார், பெங்களூரு சென்று ராகேஷ்குமாரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து, நேற்று அவரை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
The post 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் பெங்களூருவில் கைது appeared first on Dinakaran.