திருமலை: வங்கி லோன் அதிகாரியை நிர்வாணப்படுத்தி பணம் பறித்த வழக்கில் 2 இளம்பெண்கள், பொதுமேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் குண்டூர் தாரகராம நகரை சேர்ந்தவர் விஜயசாரதி (35). இவர் பாபட்லா மாவட்டம் சிராலாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் முதன்மை கிளை லோன் அதிகாரியாக பணிபுரிகிறார். இவரிடம் சிராலா பகுதியை சேர்ந்த ஹேமலதா என்பவர் வங்கிக்கடன் வாங்கி அதற்கான தவணையை செலுத்தியுள்ளார். பின்னர் கடந்த மாதம் மீண்டும் லோன் கேட்டு விண்ணப்பித்தார். இதுகுறித்து வங்கியின் பொதுமேலாளர் நேரு தெரிவித்தபடி அதிகாரி விஜயசாரதி கடந்த 7ம் தேதி ஹேமலதாவின் வீட்டிற்கு கள ஆய்வு நடத்த சென்றார். அப்போது அங்கு அறையில் அமர வைத்த ஹேமலதா, கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
சிறிதுநேரத்தில் அந்த வீட்டுக்குள் திடீரென வந்த ஒரு இளம்பெண் மற்றும் 3 வாலிபர்கள் கதவை சாத்தினர். இதனால் சந்தேகமடைந்த விஜயசாரதி, `நீங்கள் யார்?’ என கேட்டார். ஆனால் அதற்குள் அந்த பெண் மற்றும் 4 பேரும் விஜயசாரதியை சரமாரியாக தாக்கி நிர்வாணப்படுத்தியுள்ளனர். அதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். பின்னர் விஜயசாரதியின் செல்போனை பறித்துக்கொண்டு ஜிபே மூலம் தங்கள் கணக்கிற்கு ரூ.72,000 அனுப்பிக்கொண்டனர். மேலும் ரூ.10 லட்சம் தரவேண்டும். தவறினால் தங்களுடன் வந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீசில் புகார் அளிப்போம் எனவும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து வங்கிக்கு சென்ற விஜயசாரதி பொதுமேலாளரிடம் தெரிவித்தார். அதற்கு அவர், இந்த விவகாரத்தில் போலீசுக்கு தெரியாமல் முடித்துவிடலாம் எனக்கூறி, விஜயசாரதியிடம் இருந்து ரூ.6.50 லட்சம் வாங்கி அதனை அந்த கும்பலிடம் கொடுத்து அவர்களிடம் இருந்த நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை வாங்கி தந்தாராம்.
இப்பிரச்னையை சுமூகமாக முடித்ததற்காக விஜயசாரதியிடம் ரூ.75 ஆயிரத்தை பொதுமேலாளர் நேரு பெற்றாராம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அந்த கும்பல் மீண்டும் விஜயசாரதியை தொடர்புகொண்டு ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயசாரதி, போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வங்கி பொதுமேலாளர் நேரு, ஹேமலதா, மற்றொரு இளம்பெண் உட்பட மொத்தம் 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post வங்கி அதிகாரியை நிர்வாணப்படுத்தி பணம் பறிப்பு: 2 இளம்பெண்கள் உள்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.