அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான அவமதிப்பு வழக்கில் அடுத்த வாரம் உத்தரவு: டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி

புதுடெல்லி: அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் வாரம் விசாரணை நடத்தி உத்தரவிடுவதாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் கடந்த 27ம் தேதி ஒரு அவசர மனுவை வழங்கினார். அதில், “அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வருவதால், அது முடியாத நிலை இருந்து வரும் நிலையில் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளரை அங்கீகாரம் செய்து எடப்பாடி பழனிச்சாமி கொடுக்கும் கடிதத்தை ஏற்க கூடாது என்று தெரிவித்திருந்தார். ஆனால் இதனை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை என்பதை அடிப்படையாக கொண்டு, புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில்,புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோஜ் செல்வராஜ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு முறையீட்டை நேற்று வைத்தார். அதில் “வரும் 19ம் தேதி மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசரமாக பட்டியலிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக கடந்த 2023ம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு மட்டுமே இரட்டை இலை சின்னம் உச்ச நீதிமன்றத்தால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஒதுக்கப்பட்டது. இதனையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிமன்றம், வழக்கை வரும் வாரம் பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளது.

 

The post அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான அவமதிப்பு வழக்கில் அடுத்த வாரம் உத்தரவு: டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: