திருப்பூர்,மே26: இஸ்லாமியர்கள் கொண்டாடக்கூடிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை முக்கியமான ஒன்றாகும். இந்த பண்டிகை தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஆடுகளை பலி கொடுத்து இறைச்சி மற்றும் பிரியாணி ஆகியவற்றை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஏழை எளியோர் என அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பது வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு பக்ரீத் பண்டிகை வருகின்ற ஜூன் 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக செம்மறி ஆடுகள் விற்பனை தற்போது முதலே தொடங்கியுள்ளது.கர்நாடக மாநிலம் மட்டுமல்லாது தமிழகத்தின் மதுரை,சேலம்,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் செம்மறி ஆடுகள் விற்பனைக்காக வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன.
தற்போது செம்மறி ஆடுகள் குறைந்தபட்சம் ரூ.15,000 முதல் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குர்பானி கொடுக்கப்படக்கூடிய ஆடுகளின் எடை,உயரம்,நிறம் மற்றும் கொம்பின் நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆடுகளை விலை பேசி வாங்கி செல்கின்றனர். பக்ரீத் பண்டிகை நெருங்கி வரக்கூடிய சமயங்களில் அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனவும், அதற்கேற்றார் போல் விலையும் அதிகரிக்க கூடிய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். குர்பானி கொடுக்கக்கூடிய இஸ்லாமியர்கள் குழுக்களாக சேர்ந்து திண்டுக்கல்,சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகவே சென்று பட்டியில் விலை பேசி ஆடுகளை பெற்று வருவதால் இந்த ஆண்டு விற்பனை சுமாராகவே இருப்பதாகவும் தெரிவித்தனர்.
The post பக்ரீத் பண்டிகைக்கான ஆடுகள் விற்பனை தொடங்கியது appeared first on Dinakaran.