பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

உடுமலை, ஜூன் 7: பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதேபோல், கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை, தேனாறு, சின்னாறு, பாம்பாறு, கூட்டாறு வழியாக அமராவதி அணைக்கு வருகிறது. தற்போது, கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையில் தற்போது 50 அடிக்கு மேல் நீர்மட்டம் உள்ளது. இதையடுத்து, விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 8 வாய்க்கால்களுக்கு இன்று (7ம் தேதி) தண்ணீர் திறக்கப்படுகிறது. இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,“அமராவதி எட்டு வாய்க்கால் பகுதிக்கு முதல் போகம் நெல் சாகுபடிக்கு ஆற்று மூலமாக மொத்தம் 135 நாள், 80 நாள் திறப்பு, 55 நாள் அடைப்பு என்ற சுழற்சி முறையில் இன்று காலை 10 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும். இதன்மூலம் 7,520 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்” என்றனர்.

The post பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: