பெண்களை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்

 

சேலம், மே 26:சேலம் அம்மாபேட்டை பெரியார்தெருவை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (23). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் அம்மாபேட்டை காலனியில் தனது நண்பர்களுடன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள், அவ்வழியே வந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை கிண்டல் செய்துள்ளனர். இதனை பார்த்த கோகுலகிருஷ்ணன், அந்த 3 வாலிபர்களையும் தட்டிக்கேட்டு அங்கிருந்து விரட்டி விட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீராணம் தாதம்பட்டி பிரிவு ரோடு பகுதியில் கோகுலகிருஷ்ணன் நின்றிருந்தார். அப்போது அங்கு, அவர் ஏற்கனவே பெண்களை கிண்டல் செய்ததற்காக கண்டித்த 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள், கோகுலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கினர். கீழே கிடந்த செங்கல்களை எடுத்து முகத்தில் அடித்தனர். இதனால், தலை, முகம், கைகளில் பலத்த காயமடைந்த அவர், அலறி துடித்துள்ளார். உடனே 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

படுகாயமடைந்த கோகுலகிருஷ்ணன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுபற்றி வீராணம் போலீஸ் எஸ்ஐ பாலன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கோகுலகிருஷ்ணனை தாக்கியது, அப்பகுதியை சேர்ந்த சதீஷ், தமிழ், தேவா எனத்தெரியவந்தது. அவர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில்
ஈடுபட்டுள்ளனர்.

The post பெண்களை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: