பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் மீண்டும் தக்காளி சாகுபடி

*விவசாயிகள் ஆர்வம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி அதிகளவு உள்ளது.

ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்வதால், சுற்றுவட்டாரத்தில் அடிக்கடி தக்காளி அறுவடை பணி நடைபெறுகிறது. அந்நேரத்தில் மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து அதிகரித்து விலை சரிகிறது. கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையையொட்டி சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடிகள், மார்ச் மாதம் துவக்கத்தில் நன்கு வளர்ச்சியடைந்தது.

இதையடுத்து பல இடங்களில் தக்காளி அறுவடை பணி தீவிரமாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களில் அறுவடை தீவிரத்தால் அந்நேரத்தில் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகமானது. மேலும் திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்தும் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

மார்க்கெட்டுக்கு தொடர்ந்து தக்காளி வரத்து அதிகத்தால், அதன் விற்பனை குறைந்து விலை கடுமையாக சரிந்தது. சுமார் 2 மாதத்திற்கு முன்பே பல நாட்களாக, 14 கிலோ எடைகொண்ட ஒரு பெட்டி தக்காளி 100 முதல் அதிகபட்சமாக ரூ.130க்கே ஏலம் போனது. சராசரியாக ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.10க்கே விற்பனையானது.

தற்போது வெளியூர்களிலிருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், அதன்விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில், தற்போது வெயிலின் குறைவாக இருப்பதுடன், மழையும் போதியளவு இல்லை எனலாம். இருப்பினும், சுற்றுவட்டார கிராமங்களில் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட தக்காளி செடியுடன் விளை நிலத்தை உழுது, மீண்டும் புதிதாக தக்காளி சாகுபடியில் விவசாயிகள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

போதிய மழையில்லாமல் இருந்தாலும், பல இடங்களில் சொட்டுநீர் பாசனத்தில் தக்காளி சாகுபடி செய்கின்றனர். சுற்றுவட்டாரத்தில் தக்காளி அறுவடை நிறைவடைந்த நிலையில், புதிதாக தக்காளி சாகுபடி துவக்கத்தால், அடுத்து பெய்யும் பருவமழைக்கு விரைவில் விளைச்சலடையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் மீண்டும் தக்காளி சாகுபடி appeared first on Dinakaran.

Related Stories: