மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி ஆதாயம் தேடும் மோடி: திருமாவளவன் தாக்கு

திருச்சி: விசிக தலைவரும் எம்பியுமான தொல்.திருமாவளவன் திருச்சியில் இன்று அளித்த பேட்டி: நாளை(14ம் தேதி) மாலை 4 மணி அளவில் திருச்சி அண்ணா ஸ்டேடியம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மதசார்பின்மை காப்போம் பேரணி தொடங்குகிறது. இதில் தமிழகம் முழுவதிலிருந்து முன்னணி பொறுப்பாளர்கள் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்கின்றனர். சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை ஒன்றிய பாஜ அரசு கையாளுகிறது. இந்துக்களை அணி திரட்டுவதற்காக அரசியல் செய்கிறது. சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சி அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்தப் பேரணி நடைபெறுகிறது.

ஒன்றிய அரசு எந்த மதத்தின் சொத்து நிர்வாகத்திலும் தலையிடாத போது இஸ்லாமியர்களின் சொத்து நிர்வாகத்தில் மட்டும் வெளிப்படையாக தலையீடு செய்வது அரசமைப்பு சட்டம், மதச்சார்பின்மைக்கு எதிரானது. மக்களை மதத்தின் பெயரால் பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார் மோடி. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதற்காக முருகவேல் யாத்திரை, முருக பக்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துகின்றனர்.

நிபந்தனை அரசியலை கூட்டணிக்குள் செய்யக்கூடாது. கூட்டணியின் நலம் முதன்மையானது. திமுகவுக்கு எப்படி கூட்டணி பொறுப்புள்ளதோ, அதே போல கூட்டணி கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது. திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்த பார்க்கின்றனர். ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூட்டணிக்காக இரண்டாவது முறை வந்து விட்டார். அதிமுக கூட்டணி இன்னும் வடிவம் பெறவில்லை என்பது கசப்பான உண்மை. ஊழலை விட மதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி ஆதாயம் தேடும் மோடி: திருமாவளவன் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: