ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலம் விழுந்து ஒருவர் பலியான விவகாரம்; தூண்களில் பாலத்தை நிலைநிறுத்தியபோது விரிசல் ஏற்பட்டதே விபத்துக்கு காரணம்: ஆய்வுக்கு பின் அதிகாரி தகவல்

ஆலந்தூர்: சென்னையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடக்கிறது. இதில் மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் 44.6 கி.மீ. துாரம் உடையது. இத்தடத்தில், போரூர் முதல் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகம் மையம் இடையே பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. போரூரில் இருந்து நந்தம்பாக்கம் பகுதி வரை ரயில்வே பாலத்தின் கீழ், 30 அடி உயரத்தில், வாகனங்கள் செல்லும் வகையில் இணைப்பு பாலம் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன. இதற்காக இரு தூண்கள் இடையே ராட்சத கான்கிரீட் பாலங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், ராமாபுரம் ‘எல் அண்டு டி’ நிறுவனம் அருகே, 40 அடி உயரமுள்ள கான்கிரீட் பாலம், நேற்றிரவு 9 மணியளவில் திடீரென சரிந்து சாலையில் விழுந்தது. அப்போது, பரங்கிமலையில் இருந்து போரூர் நோக்கி பைக்கில் சென்ற, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து நந்தம்பாக்கம் போலீசார், பரங்கிமலை போக்குவரத்து போலீசார் மற்றும் மெட்ரோ ரயில்வே திட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரங்கிமலையில் இருந்து பூந்தமல்லி செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். இதற்கிடையில் கீழே விழுந்த கான்கிரீட் பாலத்தை, ராட்சத கிரேன் மூலம் உடைத்து அகற்றும் பணிகள் முழு மூச்சில் நடந்தது. இதில் பாலத்தில் அடியில் சிக்கி இறந்தவரின் உடல் மீட்கப்பட்டது. அவர், பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ் (42) என்றும் சூளைமேட்டில் பில்லிங் மிஷின் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. கீழே விழுந்த பாலத்தை அப்புறப்படுத்தும் இரவு முழுவதும் முழுவீச்சில் நடந்தது. அதற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

இந்நிலையில் சம்பவ இடத்தை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி திட்டப்பணி இயக்குநர் அர்ச்சுனன் பார்வையிட்டு பாலம் விழுந்தது எப்படி என ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தூண்களில் பாலத்தை நிலைநிறுத்திய இடத்தில் விரிசல் ஏற்பட்டதால் பாலம் விலகி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது பாலத்தை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதுபோன்ற பாலப்பணி நடக்கும் 10 இடங்களிலும் பாலத்தை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஆய்வுக்கு பின் முழுமையான விவரம் தெரியவரும்’ என்றார்.
இந்நிலையில் உயிரிழந்த ரமேஷ் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என மெட்ரோ ரயில நிர்வாகம் அறிவித்துள்ளது. விபத்து குறித்து ஆலந்தூர் தாசில்தார் மரியநாதன் கொடுத்த புகாரின் பேரில் நந்தம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் உரிய பாதுகாப்பு வசதியின்றி பணிகளை நடத்தியதாக 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட மேலாளர் மீது வழக்குபதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

The post ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலம் விழுந்து ஒருவர் பலியான விவகாரம்; தூண்களில் பாலத்தை நிலைநிறுத்தியபோது விரிசல் ஏற்பட்டதே விபத்துக்கு காரணம்: ஆய்வுக்கு பின் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: