திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நேற்று பள்ளி வாகனங்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. அதனை, கலெக்டர் தர்ப்பகராஜ் பார்வையிட்டார்.கடந்த 2012ம் ஆண்டு சென்னை தாம்பரத்தில் தனியார் பள்ளி வாகனத்தில் பயணித்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி, இருக்கையின் கீழ் இருந்த ஓட்டையில் விழுந்து பலியானார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் எதிரொலியாக, ஆண்டுேதாறும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து, பள்ளி வாகனங்கள் மீதான ஒழுங்கு மற்றும் கட்டுபாடு சட்டத்தில் சிறப்பு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. மேலும், பள்ளி வாகனங்கள் 16 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறப்பதற்குள் பள்ளி வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி தணிக்கை சான்று பெற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட சுமார் 125 பள்ளிகளைச் சேர்ந்த 331 வாகனங்கள் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அப்போது, வாகனங்களின் தரம், இயக்கும் நிலையில் உள்ளதா?, விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா?, கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதா?, காமிரா செயல்படுகிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, குறைபாடுகள் கண்டறியப்பட்ட 21 வாகனங்கள், அவற்றை நிவர்த்தி செய்த பிறகு மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதன் பிறகே இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது,இந்நிலையில், திருவண்ணாமலை எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வுப் பணியை கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி சுதாகர் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது, வாகனங்களில் அவசரகால கதவுகள் பயன்பாட்டில் உள்ளதா, அவசர நேரத்தில் எளிதில் திறக்க முடிகிறதா என வாகனத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவி, தீத்தடுப்பு கருவி, தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தனர். அதேபோல், பள்ளி வாகனங்களை இயக்குவோர் உரிய அனுபவமும், தகுதியும் உள்ளவராக இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
ஆய்வின்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் கருணாநிதி, முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், ஏடிஎஸ்பி பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.அதன்தொடர்ச்சியாக, ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்றும், செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் வரும் 23ம் தேதியும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி வாகனங்களின் தரம் ஆய்வு appeared first on Dinakaran.