திருமலை: ஐதராபாத்தில் உள்ள தெலங்கானா கவர்னர் மாளிகையில் 4 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டுபோனது. இதுதொடர்பாக ஒப்பந்த ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பிரதான சாலையில் கவர்னர் மாளிகை உள்ளது. பாதுகாப்பு கெடுபிடி நிறைந்த இந்த பகுதியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் இங்குள்ள சுதர்மா பவன் கட்டிட முதல் மாடியில் கணினி அறை உள்ளது. கடந்த 15ம் தேதி வழக்கம்போல் கவர்னர் மாளிகை அலுவலர்கள் பணிக்கு வந்தனர். அப்போது கணினியில் சில மாற்றங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது 4 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக வேறு ஹார்ட் டிஸ்குகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 14ம் தேதி இரவு ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் மாடிக்கு சென்று சில கோப்புகள் அடங்கிய 4 ஹார்ட் டிஸ்க்குகளை திருடிச்சென்றது பதிவாகியிருந்தது. கணினி அறைக்கு வந்து சென்ற நபர், வெளிநபர் அல்ல என்பதை போலீசார் உறுதி செய்தனர். அதன்பின்னர் கவர்னர் மாளிகை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். அதில் ஒப்பந்த ஊழியர் னிவாஸ் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரை பிடித்து ரகசிய அறையில் வைத்து தீவிரமாக விசாரித்தனர். இதில் அவர் ஹார்டு டிஸ்க்குகளை திருடியது தெரிய வந்தது. மேலும் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், ‘னிவாஸ் ஏற்கனவே ராஜ்பவனில் பணிபுரியும் பெண் ஊழியரின் புகைப்படத்தை மார்பிங் செய்த குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதோடு அவர் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், போலீசார் னிவாசை கடந்த 10ம் தேதி கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் ஜாமினில் வெளியே வந்த னிவாஸ் அலுவலக கம்ப்யூட்டரில் மேலும் சில மார்ப்பிங் படங்கள் இருப்பதால் அதனை எடுப்பதற்காக ஐ.டி. கார்டை பயன்படுத்தி 14ம் தேதி இரவு 10.11 மணிக்கு ராஜ்பவன் உள்ளே 104ல் உள்ள கம்ப்யூட்டர் அறைக்கு சென்று ஹார்ட் டிஸ்க்குகளை திருடிக்கொண்டு வேறு ஹார்ட் டிஸ்க்குகளை வைத்துள்ளார்’ என்றனர். தற்போது னிவாசை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவர் திருடிய ஹார்ட் டிஸ்க்குகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் ஒப்பந்த ஊழியர் னிவாசை நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்து கவர்னர் மாளிகை உயரதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
The post தெலங்கானா கவர்னர் மாளிகையில் 4 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு: ஒப்பந்த ஊழியர் சஸ்பெண்ட்: பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.