10ம் வகுப்பு விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம் செய்து மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் பெற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. அதன்படி, விண்ணப்பித்த மாணவ, மாணவியர் இன்று முதல் 17ம் தேதி வரை அரசுத் தேர்வுகள் இணைய தளமான www.dge.tn.gov.in என்ற இணைய தளத்துக்கு சென்று பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மேற்கண்ட அதே இணைய தளத்தில் மறுகூட்டலுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து, 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையில் அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். இதற்கான முகவரியும் இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை ஒப்படைக்க வேண்டும். கட்டணத்தை பொறுத்தவரையில் மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.505ம், மறு கூட்டல் செய்ய பாடம் ஒன்றுக்கு ரூ.205ம் செலுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post 10ம் வகுப்பு விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம் செய்து மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: