ஊட்டி, மே 20: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை முன்னிட்டு நடைபெற்று வரும் கலை நிகழ்ச்சிகளில் நேற்று கேரளாவின் கதகளி நடனம் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 3ம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. தொடர்ந்து, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி படகு இல்லத்தில் படகு போட்டிகள், ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி நடந்தது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
கோடை விழா நிகழ்ச்சிகளின் முக்கிய நிகழ்ச்சியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி கடந்த 15ம் தேதி துவங்கியது. இதில் சிறப்பம்சமாக சுமார் 7 லட்சம் மலர்களை கொண்டு சோழ மன்னர்களின் சிறப்பை பிரதிபலிக்கும் வண்ணம் பொன்னியின் செல்வன் கோட்டை அலங்காரம், அரண்மனை நுழைவுவாயில் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கரிகாலன் கல்லணை, ராஜ சிம்மாசனம், ஊஞ்சல், சிப்பாய்கள், யானை, அன்ன பறவை ரதம், பீரங்கி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் அமைக்கப்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று பாலக்காட்டை சேர்ந்த கெல்லிராவம் கதகளி குழு சார்பில் கேரளாவின் பாரம்பரியமிக்க கதகளி நடன நிகழ்ச்சி நடந்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நடந்த இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர். குறிப்பாக தாவரவியல் பூங்காவிற்கு சுற்றுலாவிற்கு வந்திருந்த கேரள சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். தங்களது செல்போன்களிலும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
The post மலர் கண்காட்சி கலை நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த கதகளி appeared first on Dinakaran.