ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்த காலம் மாறி தற்போது ஏற்றுமதி செய்கிறோம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்


கோவை: ஒரு காலத்தில் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்த நிலை மாறி, நாம் தற்போது ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறோம் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார். கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதன்பின், அவர் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார். இந்த ஆபரேஷனில் அதிக தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நம் நாட்டில் இருந்து கொண்டே எதிரிகளை தாக்கினோம்.

நம் நாட்டில் தயாரான ராணுவ தளவாடங்களை நாம் பயன்படுத்தினோம். அதற்கு பிரதமர் மோடியும், ராணுவத்தில் உள்ள இன்ஜினியர்களுமே காரணம். ஒரு காலத்தில் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்த நிலை மாறி, நாம் தற்போது ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறோம். இந்திய இன்ஜினியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் தொழில்நுட்ப உலகை ஆட்சி செய்கிறார்கள். உலகத்திலேயே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. உலக அளவில் அனைத்து துறையிலும் போட்டி போடுபவர்களாக மாற வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய கல்வி கொள்கை அமைக்கப்பட்டுள்ளது.

மும்பை, அகமதாபாத் இடையே விரைவில் புல்லட் ரயில் செல்ல இருக்கிறது. வந்தே பாரத் ரயில் பெட்டிகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரூ.50 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளோம். இதற்கெல்லாம் நம் பிரதமர் நரேந்திர மோடியின் பாலிசி தான் காரணம். 2047ல் நூறாவது சுதந்திரம் அடையும் போது உலகத்துக்கு வழிகாட்டும் வல்லரசு நாடாக இந்தியா இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்த காலம் மாறி தற்போது ஏற்றுமதி செய்கிறோம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: