கோழிக்கோடு: அரபிக்கடலில் தீப்பற்றிய சரக்கு கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் பணி இன்று மாலை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. லைபீரியா கொடியுடைய எம்எஸ்சி எல்சா 3 சரக்கு கப்பல் கொச்சி கடற்கரையில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் மே 25ம் தேதி மூழ்கியது. கப்பலில் 640 கன்டெய்னர்கள் இருந்தன. இதில் 13 கன்டெய்னர்களில் ஆபத்தான பொருட்களும், 12 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தன. இவற்றில் சுமார் 100 கன்டெய்னர்கள் கடலில் மிதந்து, ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி கடற்கரைகளில் கரை ஒதுங்கின.
இவற்றில் பிளாஸ்டிக் துகள்கள், பாலித்தீன், கால்சியம் கார்பைடு உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் இருந்தன. கேரள அரசு இந்த சம்பவத்தை ‘மாநில பேரிடர்’ என அறிவித்தது. கன்னியாகுமரி கடற்கரையிலும் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் ஆபத்தான பொருட்கள் கரை ஒதுங்கியது. இதனால் கடல் மாசுபாடு மற்றும் மீனவர் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்ட கடற்கரை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியிலும் 5 கி.மீ. தூரம் பிளாஸ்டிக் துகள்கள் கரை ஒதுங்கியுள்ளது. இந்த கப்பல் மூழ்கிய பாதிப்புகள் அடங்குவதற்குள், அரபிக்கடலில் மற்றொரு கப்பல் தீ பிடித்து எரிந்து கன்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் எம்வி வான்கய் 503 என்ற சரக்கு கப்பல் ஜூன் 7ம் தேதி கொழும்பிலிருந்து புறப்பட்டு, மும்பை நோக்கி செல்லும் வழியில், கோழிக்கோடு பேய்பூர் கடற்கரையில் இருந்து 130 கடல் மைல் தொலைவில் 9ம் தேதி கன்டெய்னர் வெடிப்பால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்திய கடற்படை, கடலோர காவல் படையினர் இணைந்து 18 பணியாளர்களை மீட்டனர். தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இந்த தீ விபத்தால் கன்னியாகுமரி கடல் பகுதியில் நேரடியாக பாதிப்பு ஏற்பட்டதற்கான உறுதியான தகவல்கள் இல்லை. இருப்பினும், 100 டன் பங்கர் ஆயில் கப்பலில் உள்ளதால் கடற்கரை பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய கடல்சார் சேவை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரபிக்கடலில் தீப்பற்றிய சரக்கு கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் பணி இன்று மாலை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி 4வது நாளாக தொடர்கிறது. தீயை அணைக்கும் பணியில் 7 கப்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. சரக்கு கப்பலில் பற்றிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ மேலும் பரவாமல் இருக்க விமானங்கள் மூலம் ரசாயன பொடி நடவடிக்கை மேற்கொள்ளபப்ட்டுள்ளது.
The post கோழிக்கோடு அருகே சரக்கு கப்பலில் 4-வது நாளாக பற்றி எரியும் தீ: கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல திட்டம் appeared first on Dinakaran.