பாஜ அமைச்சர் குன்வர் விஜய் ஷா விவகாரத்தில் சட்டத்தின் நடைமுறை என்று ஒன்று உள்ளது: உச்ச நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்திய அரசு தரப்பில் விளக்கமளித்தவர்களில் ஒருவர் ராணுவ கர்னல் சோபியா குரேஷி ஆவார். இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கர்னல் சோபியா குரேஷியை ‘‘தீவிரவாதிகளின் சகோதரி” என்று அம்மாநில பாஜ அமைச்சர் குன்வர் விஜய் ஷா தெரிவித்திருந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து கர்னல் சோபியா குரேஷி விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் தன் மீதான கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமைச்சர் குன்வர் விஜய் ஷா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து அதனை பரிசீலனை செய்த நீதிமன்றம் நேற்று முன்தினம் அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜ அமைச்சர் குன்வர் விஜய் ஷா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், “ வழக்கை வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,\\” இந்த விவகாரம் தொடர்பாக மேலும் இரண்டு இடையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ” என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிபதிகள், “சட்டத்தின் நடைமுறை என்று ஒன்று உள்ளது. அதனை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். கண்டிப்பாக அதனை நாங்கள் கையிலெடுப்போம். இந்த விவகாரத்தில் இரண்டு இடையீட்டு மனு என்ன, எத்தனை வேண்டுமானாலும் தாக்கல் செய்யுங்கள். அதுபற்றி எங்களுக்கு கவலை கிடையாது. நாங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கேட்போம்” என்று எச்சரிக்கையோடு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அமைச்சரை நீக்க கோரி ம.பி ஆளுநர் மாளிகை முற்றுகை
கர்னல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மபி அமைச்சரை பதவி நீக்க கோரி காங்கிரஸ் போராட்டம் தொடங்கியுள்ளது. விஜய் ஷாவை பதவியில் இருந்து நீக்க கோரி மாநில ஆளுநர் மாளிகை முன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காலவரையற்ற போராட்டத்தை நேற்று தொடங்கியுள்ளனர். மபி சட்ட பேரவை எதிர்க்கட்சி தலைவர் உமங்க் சிங்கார் மாநில ஆளுநர் மங்குபாய் படேலை சந்தித்து சர்ச்சைக்குரிய கருத்த தெரிவித்த விஜய் ஷாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆளுநர் மங்குபாய் படேலை சந்தித்த பிறகு உமங்க் சிங்கார் கூறுகையில், நாங்கள் 15 எம்எல்ஏக்கள் போராட் டம் நடத்தி வருகிறோம்.அவரை பதவி நீக்காவிடில் காலவரையற்ற போராட்டம் நடத்துவோம் என்றார்.

The post பாஜ அமைச்சர் குன்வர் விஜய் ஷா விவகாரத்தில் சட்டத்தின் நடைமுறை என்று ஒன்று உள்ளது: உச்ச நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: