கடந்த 4 ஆண்டுகளில் விதைப்பரிசோதனை நிலையத்தில் 11 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை: மூத்த வேளாண்மை அலுவலர் தகவல்

திருவள்ளூர், மே 17: விதைப்பரிசோதனை நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 11 ஆயிரம் விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 730 விதை மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என மூத்த வேளாண்மை அலுவலர் வே.சுகுணா ெதரிவித்துள்ளார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் விதை சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத்துறை கட்டுப்பாட்டில் மாவட்ட அளவில் விதை பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. திருவள்ளுர் மாவட்டத்தில் நெ.48, ஜேஎன் ரோடு, பெரியகுப்பம், திருவள்ளுர் என்ற முகவரியில் 2011ம் ஆண்டு முதல் விதை பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. விதை தரங்களை நிர்ணயிப்பதில் விதைப்பரிசோதனை நிலையம் முக்கிய பங்காற்றுகிறது.

விதை பரிசோதனை நிலையத்தில் அனைத்து வகையான நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆய்வக உபகரணங்களைக் கொண்டு விதைகளின் தரத்தை துல்லியமாக பரிசோதித்து தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இங்கு நெல், உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை, எள், காய்கறி விதைகள் மற்றும் கீரை விதைகள் போன்ற அனைத்து வகையான விதைகளும் பரிசோதனை செய்யப்படுகிறது. விதையின் தரத்தை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளான முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிறரக கலவன்கள் பரிசோதிக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

சான்று விதைகள்
ஆய்விற்கு பெறப்படும் சான்று விதைகளை முன்னுரிமை அடிப்படையில் பகுப்பாய்வு செய்து முடிவுகளை உடனுக்குடன் வழங்கப்பட்ட பிறகே, சான்று பெற்ற விதைகளாக விவசாயிகளுக்கு வேளாண்த்துறையின் மூலம் வழங்கப்படுகிறது. சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்துவதால் விதையின் தேவை குறைவதுடன் உற்பத்திக்கான செலவு குறைக்கப்பட்டு கூடுதல் விளைச்சல் கிடைக்கிறது. விதை விற்பனை நிலையங்களில் விற்கப்படும் தனியார் விதைகளும் விதை ஆய்வாளர்கள் மூலம் விதைமாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை நிலையத்தில் முளைப்புத்திறன் மற்றும் புறத்தூய்மை மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.

விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விதை விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் விதை மாதிரிகளும் முன்னுரிமை அடிப்படையில் பரிசோதித்து முடிவுகள் வழங்கப்படுகிறது. திருவள்ளுர் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 730 விதைமாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தரமற்ற விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதை தடுப்பதில் விதைப் பரிசோதனை நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது என திருவள்ளுர் மூத்த வேளாண்மை அலுவலர் வே.சுகுணா தெரிவித்துள்ளார்.

The post கடந்த 4 ஆண்டுகளில் விதைப்பரிசோதனை நிலையத்தில் 11 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை: மூத்த வேளாண்மை அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: