தாம்பரம், மே 17: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்தல் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள், மழைநீர் தேங்க வாய்ப்புள்ள 32 இடங்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்தல், திடக்கழிவு மேலாண்மை பணிகளில் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு கண்காணித்தல், தூய்மைப் பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு பதிவு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதேபோல், வாய்ஸ் ஆப் தாம்பரம் என்ற செயலி மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி, அதன் மீது துறை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கண்காணித்தல், நிவர்த்தி செய்யப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாம்பரம் மாநகராட்சியின் மண்டலங்கள் 1 முதல் 5 வரையில் வாய்ஸ் ஆப் தாம்பரம் என்ற செயலியின் மூலம் பொறியியல், சுகாதாரம், வருவாய், நகரமைப்பு ஆகிய பிரிவுகள் மற்றும் இதர சேவைகள் தொடர்பாகவும் இதுநாள்வரை 13,869 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, 12,889 புகார்களுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 93 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள புகார்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வாய்ஸ்ஆப் தாம்பரம் செயலி மூலம் 12,889 புகார்களுக்கு உடனடி தீர்வு: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.