மாமல்லபுரம் – திருக்கழுக்குன்றம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரம், மே.15: மாமல்லபுரம் – திருக்கழுக்குன்றம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் படுகாயம் அடைகின்றனர். இதனை, தடுக்க மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை முக்கிய சாலையாகும். இச்சாலை வழியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கு அரசு பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையின் நடுவே மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் சாலை, பூஞ்சேரி, அம்பாள் நகர், வடகடம்பாடி, காரணை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மாடுகள் தினமும் சுற்றி வருவதுடன் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே படுத்து ஓய்வெடுக்கின்றன.

இதனால், அவ்வழியாக செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் போலீஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. அதேபோல், பைக்கில் செல்பவர்கள், திடீரென குறுக்கே ஓடும் மாடுகளின் மீது மோதி கீழே விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். ஒருசில, நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறுகின்றன.இதனை, தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதையும், மீறி மாடுகளை சாலையில் திரியவிட்டால் பறிமுதல் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.கடந்தாண்டு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக இருந்த ராகுல்நாத் சாலையில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து, மாடுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டார்.

தற்போது, மாவட்ட கலெக்டரின் உத்தரவு காற்றில் பறப்பதாகவும், அந்த உத்தரவை மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகளோ, உள்ளாட்சி பிரதிநிதிகளோ யாரும் கண்டு கொள்வதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.எனவே, தற்போது உள்ள மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உடனடியாக தலையிட்டு மாடுகளை சாலையில் திரியவிட்டால் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க போர்க்கால அடிப்படையில் உத்தரவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறுகையில்; “மாமல்லபுரம் இசிஆர் சாலை, ஓஎம்ஆர் சாலை, கோவளம் சாலை மற்றும் திருக்கழுக்குன்றம் சாலைகள் முழுவதும் மாடுகள் ஆங்காங்கே சுற்றித் திரிகின்றன. மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை கயிற்றால் கட்டி பராமரிப்பது இல்லை. காலையில் பால் கறந்த பிறகு கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். ஒருசில, உரிமையாளர்கள் மாடு இருக்கும் இடத்துக்கே சென்று பால் கறந்து விற்பனை செய்கின்றனர். இதனால், தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, மாடுகள் சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதால் வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்படுவதுடன், ஒருசில நேரங்களில் மாடுகளும் உயிரிழக்கும் நிலை உள்ளது’’
என்றனர்.

கலெக்டர் உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள்
மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே மாடுகள் சுற்றித் திரிகின்றன. மேலும், சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்தாண்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவு காற்றில் பறக்கிறது. இந்த, உத்தரவை அரசு அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக செயல்படுகின்றனர். எனவே, கலெக்டர் உத்தரவை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post மாமல்லபுரம் – திருக்கழுக்குன்றம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: