தனியார் பஸ்சை மடக்கி ரகளை தட்டிக்கேட்ட எஸ்ஐக்கு ‘பளார்’: 2 வாலிபர்கள் கைது

வேலூர்: வேலூர் பாலமதி சாலையில் இருந்து பாகாயம் நோக்கி நேற்று முன்தினம் பைக்கில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஓட்டேரி கூட்ரோடில் திரும்பும்போது பைக்கை, பின்னால் வந்த கார் இடித்து விட்டு பாகாயம் வழியாக சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் பைக்கில் அந்த காரை விரட்டிச் சென்றனர். ஆனால் கார் நிற்காமல் தொரப்பாடி வழியாக சென்றது. அதை விரட்டிச் சென்றும் காரை மடக்க முடியாததால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் எம்ஜிஆர் சிலை அருகில் சென்ற காட்பாடி-பாகாயம் தனியார் டவுன் பஸ்சை மறித்து அதன் முன்னால் தங்கள் பைக்கை நிறுத்தினர்.

பின்னர் அந்த பஸ்சில் ஏறி, காரை மடக்க முடியாததற்கு நீங்கள்தான் காரணம் என்று டிரைவரிடமும், கண்டக்டரிடமும் தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டிக்கேட்ட பயணிகளிடமும் அவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதை பார்த்த அங்கு போக்குவரத்து காவல் பணியில் இருந்த எஸ்ஐ வேல்முருகன் பஸ்சில் ஏறி அவர்களை தட்டிக்கேட்டார். அதற்கு அந்த வாலிபர்கள் இதை கேட்க நீ யார்? என்று கேட்டு அவரது கன்னத்தில் பளார், பளார் என அறைவிட்டனர்.

தகவல் அறிந்த பாகாயம் போலீசார் வந்து பைக்குடன் அந்த வாலிபர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பலவன்சாத்துக்குப்பம் சிவில் சப்ளை குடோன் மலையடிவாரத்தை சேர்ந்த மணிகண்டன்(25), விருபாட்சிபுரத்தை சேர்ந்த ராஜேஷ்(27) என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

The post தனியார் பஸ்சை மடக்கி ரகளை தட்டிக்கேட்ட எஸ்ஐக்கு ‘பளார்’: 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: