திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 6வது வார்டு கவுண்டநாயக்கன்பாளையத்தில் 17.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இங்கு 2 காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த குடிநீர் தொட்டியின் மேல் சில இளைஞர்கள் இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். சந்தேகமடைந்த சிலர் தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பால் பாக்கெட், செய்தித்தாள் கிடந்ததாகவும், மனித மலம் கழிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. பொதுமக்களை பார்த்ததும் அந்த இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். இதையடுத்து மனித மலம் குடிநீர் தொட்டியில் கலந்திருப்பதாக தகவல் பரவியது. அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், வடக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கவில்லை எனவும், பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில் அந்த தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் விநியோகம் செய்வதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் குடிநீர் தொட்டியின் மீது அமர்ந்திருந்ததாக நெரிப்பெரிசலை சேர்ந்த நிஷாந்த் (19), திருமுருகன்பூண்டியை சேர்ந்த சஞ்சய் (22) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் போயம்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், சம்பளம் கொடுப்பதாக கூறி கவுண்டநாயக்கன்பாளையத்திற்கு வரச் சொன்னதாகவும், இங்கு வந்து அழைத்தபோது குடிநீர் தொட்டிக்கு வரச் சொன்னதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் பிரிவின் கீழ் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
The post குடிநீர் தொட்டியில் மலம் கலப்பா? 2 பேர் கைது appeared first on Dinakaran.