கூட்டணியில் இருந்து கொண்டே மோடி கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் புதுவை முதல்வர் பாஜ அரசு மீது அதிருப்தி

புதுச்சேரி, மே 25: பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை புதுவை முதல்வர் ரங்கசாமி நேற்றும் புறக்கணித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் கூட்டங்களை தொடர்ச்சியாக புறக்கணித்து வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் அதன் அமைப்பாக திட்டக்குழு என்பது செயல்பட்டு வந்தது. திட்டக்குழு என்பது முழுமையாக கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு புதிதாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நிதி ஆயோக் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது 10வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் பாரத் மண்டபத்தில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான மாநில முதல்வர்கள் பங்கேற்று, தங்கள் மாநிலத்தின் தேவைகள் குறித்து பேசியுள்ளனர். அதே நேரத்தில், தேஜ கூட்டணி அரசு நடந்து வரும் புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் ரங்கசாமி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். இது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், ரங்கசாமி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்திருப்பது, பாஜ மீதான அதிருப்தியை வெளிப்படுத்தவே என கூறப்படுகிறது. நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? என ரங்கசாமி மக்களிடம் விளக்க வேண்டும். மேலும் பிரதமர் மோடி மீது ரங்கசாமி நம்பிக்கை இழந்துவிட்டாரா என தெளிவுபடுத்த வேண்டுமென எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே தேஜ கூட்டணி அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், வரும் தேர்தலில் பாஜவுடனான கூட்டணி தொடருமா? இல்லையா? என்பதை ரங்கசாமி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்ற மனக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில் பிரதமரை சந்திக்க விரும்பவில்லையென்றும், மேலும் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி கேட்டு பலமுறை கடிதம் எழுதியும், மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானத்துக்கு பாஜ உரிய பதிலை தராமல், தற்போதைய நிலையே தொடரும் என்ற பதிலும், உரிய நிதி பகிர்வை அளிக்காமல் புறக்கணிப்பு ஆகியவை ஒன்றிய பாஜ மீது முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில் இந்த கோரிக்கைகளையெல்லாம் பாஜ நிறைவேற்றித்தரும் என்ற நம்பிக்கையும் ரங்கசாமிக்கு இல்லையென்றும், எத்தனையோ முறை கேட்டும், கிடைக்காதது. நிதி ஆயோக் கூட்டத்தில் மட்டும் பங்கேற்று கேட்டால் உடனே கிடைத்துவிடுமா? என ரங்கசாமி நினைப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என என்.ஆர் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 2021ம் ஆண்டு ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்று 15 மாதங்கள் கழித்து ரங்கசாமி 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடியை சந்தித்தார். அது கூட மாநில பட்ஜெட்டுக்கு அனுமதி கேட்கவே சென்றிருந்தார். ஆனால் 4 ஆண்டுகளில் நிதி ஆயோக்கின் ஒரு கூட்டத்தில் கூட ரங்கசாமி பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post கூட்டணியில் இருந்து கொண்டே மோடி கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் புதுவை முதல்வர் பாஜ அரசு மீது அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: