கண்டாச்சிபுரம், மே 20: கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் தினகரன் (37), இவர் நேற்று மேல்வாலையிலிருந்து கண்டாச்சிபுரம் மார்க்கமாக அவரது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது கண்டாச்சிபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மகன் அறிவழகன் (35), மேல்வாலை தனியார் ஐடிஐ அருகே நின்று தினகரனிடம் லிப்ட் கேட்டு இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கண்டாச்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கண்டாச்சிபுரம் மடவிளாகத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (53) என்பவர் கண்டாச்சிபுரம் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுப்பிரமணி மீது தினகரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுப்பிரமணி லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
ஆனால், இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த அறிவழகன் பின்பக்கமாக விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கண்டாச்சிபுரம் போலீசார் அறிவழகனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அறிவழகனின் மனைவி சரண்யா கொடுத்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றவர் விபத்தில் பலி appeared first on Dinakaran.