கண்டாச்சிபுரம், மே 20: விழுப்புரம் அருகே 2 மகன்களை அரிவாளால் வெட்டிய தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே காணை அடுத்த மல்லிகைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் அண்ணாமலை (47). இவருக்கு அசோக் குமார் (26), அஜித்குமார் (23) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அசோக்குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தந்தை- மகனுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு அண்ணாமலை, அவரது தம்பி கந்தன் (45) என்பவருடன் வீட்டுக்கு வந்து அவரது மகன்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அண்ணாமலைக்கும், அவரது மகன்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அண்ணாமலை அரிவாளால் அசோக்குமார், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் தாக்கி வெட்டியுள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் கைகள், விரல்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அசோக்குமார், அஜித்குமார் ஆகியோர் மற்றொரு அரிவாளால் அவர்களது தந்தையை தாக்க முயன்றபோது அண்ணாமலையின் தம்பி கந்தனுக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த காணை உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெட்டு காயமடைந்த அசோக்குமார், அஜித்குமார் மற்றும் கந்தன் ஆகியோரை ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மற்றும் கந்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து அண்ணாமலையை அதிரடியாக கைது செய்தனர். மேலும் கந்தன் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலையின் 2 மகன்களான அசோக்குமார், அஜித்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை- மகன்கள் மாறி, மாறி அரிவாளால் வெட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post 2 மகன்களை அரிவாளால் வெட்டிய தந்தை அதிரடி கைது appeared first on Dinakaran.