புதுச்சேரி, மே 28: புதுச்சேரி ஆலங்குப்பம் அன்னைநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியன் (எ) நந்து (22). இவர் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு டெக்கரேஷன் செய்யும் வேலை செய்து வருகிறார். இவருடன் இவரது நண்பர் வீமன் நகரை சேர்ந்த மணி என்பவரும் சென்று வருவார். இந்நிலையில் ஸ்ரீபிரியனுக்கும், மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஸ்ரீபிரியன் ஆலங்குப்பம் ஏரிக்கரை வழியாக செல்லும் போது மணி மற்றும் அவரது நண்பர்கள் கிசாமணி, வீமன் நகர் வினோத், மதன், தீபக், ரஞ்சித், சந்த்ரு ஆகியோர் ஸ்ரீபிரியனை மடக்கி பிடித்து கட்டையால் தாக்கி, கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தவுடன் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதில் ஸ்ரீபிரியனுக்கு தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
பின்னர் அவரை மீட்ட பொதுமக்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஸ்ரீபிரியன் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி மணி உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கத்தி, பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு போலீசார் அவர்களை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post புதுவை ஆலங்குப்பத்தில் பரபரப்பு டெக்கரேஷன் தொழிலாளியை கத்தியால் வெட்டி கொல்ல முயற்சி appeared first on Dinakaran.