தனியார் தொழிற்சாலை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய 3 சிறுவர்களுக்கு வலை

புதுச்சேரி, மே 24: புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோனேரிக்குப்பம் சங்கராபரணி ஆற்றுக்கு செல்லும் வழியில் முத்தரையர்பாளையம் பகுதியை சேர்ந்த உமாபதி என்பவர் அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கம்பெனியின் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றனர். இதில் ஒரு குண்டு தொழிற்சாலை கூரை மீதும், மற்றொன்று தொழிற்சாலை முன்பக்க சுவற்றின் மீது வீசப்பட்டதில், பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதையடுத்து தொழிற்சாலை ஊழியர்கள், வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் கம்பெனியில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள மற்றொரு கம்பெனியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மூன்று நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, வெடிகுண்டு வீசி விட்டு தப்பி செல்வதும் பதிவாகியுள்ளது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அகரம் புதுநகரை சேர்ந்த சிறுவன் மற்றும் கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் வெடிகுண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள 3 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post தனியார் தொழிற்சாலை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய 3 சிறுவர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: