ஊத்துக்கோட்டை, ஏப்.26: ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி, தேவந்தவாக்கம் கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ விழா வெகு விமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் சுருட்டபள்ளி கிராமத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சித்திரை மாத வெள்ளிக்கிழமை தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலை
விநாயகர், வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா, தம்பதி சமேத தட்சினாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை, பள்ளி கொண்டீஸ்வரர், சர்வ மங்களா ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரருக்கு வெள்ளி கவசம் அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
பின்னர் மாலையில் வால்மீகிஸ்வரர் எதிரே உள்ள நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து, அருகம்புல், வில்வ இலை, மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சிவன் பார்வதி ஊர்வலமாக கோயிலை வலம் வந்தனர். இப்பூஜைகளை தலைமை குருக்கல் கார்த்திகேசன் சிவாச்சாரியார் செய்தார். பிரதோஷ விழாவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தேவந்தவாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேவபுரீஸ்வரர் கோயில் நந்திக்கும், பெரியபாளையம் ஐமுக்தீஸ்வரர் கோயில், வடதில்லை சிவன் கோயில் ஆகிய கோயில்களில் பிரதோஷம் விழா சிறப்பாக நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.