மண்டபம், மார்ச் 30: மண்டபம் அருகே வெள்ளரி ஓடை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். அதன் பின்னர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில்,‘‘நீர்வளத்தை காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும். பொதுமக்கள் தண்ணீரை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது மற்றும் எந்த வகையில் தண்ணீரை பாதுகாக்கப்படுவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதேபோல் அரசு வழங்கும் திட்டங்கள் தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படும். இதுமட்டுமின்றி அரசு பள்ளியில் ஆரம்பக் கல்வி முதல் படித்து வரும் மாணவ,மாணவிகள் உயர்கல்வி பெற புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்துவதுடன், காலை உணவு திட்டம் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகினறது.
தற்போது மின்சாரத்தை சேமித்திடும் வகையில் ஒவ்வொரு வீட்டின் மேலே சோலார் மின் திட்டம் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்தி மின்சார கட்டணங்களை குறைத்துக் கொள்ள பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என பேசினார். இந்த கூட்டத்தில் மகளிர் திட்ட அலுவலர் அருண்மொழி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மோகன்ராஜ், உதவி இயக்குநர் பத்மநாதன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமார், சோமசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மின்சாரத்தை சேமித்திட சோலார் மின் திட்டத்தை பயன்படுத்த வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.