ராசிபுரம், மார்ச் 21: ராசிபுரம் நகராட்சியில், புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரிக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நகராட்சிக்குட்பட்ட ஆத்தூர் சாலை, தட்டான்குட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், நகராட்சி சுகாதார அலுவலர் செல்வராஜ் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, 2 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு ₹25,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது ஆய்வாளர் கோவிந்தராசன், மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து சுகாதார அலுவலர் கூறுகையில், ராசிபுரம் பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்க கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
The post ராசிபுரத்தில் அதிரடி சோதனை புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரிக்கு ₹25 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.