கெடார் அருகே மரத்தில் பைக் மோதி 2 வாலிபர்கள் பலி

 

கண்டாச்சிபுரம், மார்ச் 11: கெடார் அருகே வேப்ப மரத்தில் பைக் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்கரபாணி மகன் சம்பத்குமார் (22). இவரது நண்பர் அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் கார்த்திக் (29). இவர்கள் இருவரும் சென்ட்ரிங் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கஞ்சனூர் பகுதியில் சென்ட்ரிங் வேலை முடிந்து இருவரும் ஒரே பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கார்த்திக் பைக்கை ஓட்டிக் கொண்டும், சம்பத்குமார் பைக்கின் பின்புறத்தில் அமர்ந்து கொண்டும் கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர். கெடார் அடுத்த விநாயகபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பைக் அதிவேகமாக வந்ததில் நிலைத்தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கம் உள்ள வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சம்பத்குமார் கீழே விழுந்ததில் ரத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.

இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து, ஆம்புலன்ஸ் மூலம் சம்பத்குமாரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பத்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கெடார் உதவி ஆய்வாளர் தேவரத்தினம் மற்றும் போலீசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக உயிரிழந்த சம்பத்குமாரின் தந்தை சக்கரபாணி கொடுத்த புகாரின் பேரில் கெடார் உதவி ஆய்வாளர் தேவரத்தினம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். வேப்ப மரத்தில் பைக் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கெடார் அருகே மரத்தில் பைக் மோதி 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: